சென்னை, மே 3 -
திருமுருகன்பூண்டியில் சிற்பக்கலைக் கல்லூரி அமைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி உறுப்பினர் கே.தங்கவேல் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் வெள்ளியன்று (மே 3) கேள்வி நேரத்தில் இது தொடர்பாக கே.தங்கவேல் எழுப்பிய வினாக்களும், அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வைகைசெல்வன் அளித்த பதில்கள் வருமாறு:
கே.தங்கவேல்: திருப்பூர், திருமுருகன்பூண்டி பகுதியில் சிற்பக்கலைக் கல்லூரி அமைக்க அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர்: திருமுருகன்பூண்டி பகுதியில் சிற்பக்கலை பாரம்பரியத்தை மேம்படுத்த ஏதுவாக புதியதாக சிற்பக்கலைக் கல்லூரி துவக்கும் திட்டம் ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை.
கே.தங்கவேல்: திருமுருகன்பூண்டி கோவில் 7ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதான கோவில். கொங்கு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கடந்த 300 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக அங்கு 60 கூடங்களில் 150 குடும்பங்கள் சிற்பம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப்பகுதியில் சிற்பக்கலைக் கல்லூரி தொடங்கினால், அந்த இடம் சிறப்பு மிக்கதாக மாறும்.
தமிழகத்தில் 3 இடங்களில் சிற்பங்கள் செய்யப்படுகின்றன. மாமல்லபுரத்திற்கு அடுத்து திருமுருகன்பூண்டி பகுதியில் அதிகளவில் சிற்பங்கள் செய்யப்படுவதால் அங்கு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமைச்சர்: திருமுருகன்பூண்டி பகுதியில் சிற்பக்கலைக் கல்லூரி அமைக்க வாய்ப்புகள் இல்லை. மாணவர்கள் அதிகளவில் சிற்பக்கல்லூரியில் சேர்வதில்லை. கவி உள்ளமும், கலை உள்ளமும் கொண்டவர்களால்தான் சிற்பக்கலைக் கல்லூரியில் சேர்ந்து பயில முடியும். மேலும், கல்லூரி அமைக்க பரந்தஅளவில் இடம், கடல் சார்ந்த சூழல், எழில் அங்கு இல்லை.
கே.தங்கவேல்: திருமுருகன்பூண்டி பகுதியில் 300ஆண்டுகால பரம்பரைபரம்பரையாக
சிற்பங்களை செய்து வருகின்றனர். அந்த பணிகளில் இளைஞர்கள் உட்பட குடும்பம்குடும்பமாக ஈடுபட்டு வருகின்றனர். சுவாமி மலை, திருமுருகன்பூண்டி, மாமல்லபுரம் ஆகிய இடங்களில்தான் சிற்பம் செய்யப்படுகிறது. அந்த பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஏராளமான இடமும், வாய்ப்பும் உள்ளது. ஆற்றுச்சூழலோடு அமைந்துள்ள அந்தபகுதியில் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்வாரா?
அமைச்சர்: துறை சார்ந்து ஆய்வுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு உரிய முறையில் பரிசீலிக்கப்படும்.
முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா: சிற்பக்கலை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. நவீன உலகில் இளைஞர்கள், மாணவர்கள் சிற்பக்கலை கற்க ஆர்வாகம் காட்டுவதில்லை. பிரசித்திப்பெற்ற மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உறுப்பினர் புதிய சிற்பக்கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்கிறார். அதனை தொடங்குவதில் அரசுக்கு சிரமம் ஏதும் இல்லை. போதுமான மாணவர்கள் சேர்வார்கள் என்று உறுப்பினர் உத்தரவாதம் கொடுத்தால் கல்லூரி தொடங்கப்படும்.
0 கருத்துகள்:
Post a Comment