திருப்பூர், ஜூன் 15-
திருப்பூர் மாநகராட்சி 49ஆவது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருப்பூர் மாநகரில் 49ஆவது வார்டுக்கு உட்பட்ட சூரியன் நகர் செக்குகாரன் தோட்டம் சாலைக்கும் வட பகுதியில் தெற்குத் தோட்டம் பகுதிக்கும் இடையில் ரூ.15 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஏராளமான உழைப்பாளி மக்கள் வாழும் இந்த வட்டாரத்தில் கருவம்பாளையம், தெற்குத் தோட்டம், பாரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தெற்குப் பகுதியில் உழவர் சந்தை, தென்னம்பாளையம், பல்லடம் சாலைப் பகுதிக்கு வருவதற்கு இந்த பாலம் மிகவும் உதவியாக இருக்கும்.
எனவே சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் இந்த பாலம் கட்டுவதற்காக 2012 -13ஆம் நிதியாண்டில் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்தார். தற்போது இந்த பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று இப்பாலம் கட்டுமானப் பணியை கே.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலம் பணியை உரிய காலத்தில் நிறைவேற்றவும் இப்பணிக்கு பொறுப்பான அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார். அத்துடன் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதி அடிப்படைப் பிரச்சனைகளை நிறைவேற்றித் தரும்படி சட்டமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர். அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்கு அவர் உறுதியளித்தார்.அவருடன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ச.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரக்குழு உறுப்பினரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஜி.மூர்த்தி, கட்சிக் கிளைச் செயலாளர் அ.லெனின்குமார் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment