தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று ( ஜூலை 14) நடைபெற்ற தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது வருமாறு:
கே.தங்கவேல்:
புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசுக்கு மக்கள் நம்பிக்கையோடு
வாக்களித்தார்கள். காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய விலைவாசி உயர்வுக்கும்,
தொழில்துறை நெருக்கடிக்கும் தீர்வு கிடைக்கும் என நம்பினார்கள். புதிய
அரசோ, காங்கிரசின் கொள்கையிலிருந்து இம்மியும் விலகாமல் செல்கிறது.
விலைவாசியைக் குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. ஆனால், மேலும் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் விதத்தில்
டீசல் விலை உயர்வையும், வரலாறு காணாத அளவில் 14.2 சதவீதம் பயணிகள் கட்டண
உயர்வையும், 15 சதவீதம் சீசன் டிக்கெட் மற்றும் 6.5 சதவீத சரக்கு கட்டண
உயர்வையும் செய்திருக்கின்றனர். அவர்கள் தாக்கல் செய்திருக்கும் பொது
மற்றும் ரயில்வே நிதிநிலை அறிக்கைகள், அந்நிய மூலதனத்திற்கும், பங்குச்
சந்தைக்குமே ஊக்கமளிப்பதாக உள்ளன. இன்னும் கட்டண உயர்வுகள் தொடரும் எனவும்,
பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து உயரும் எனவும் மத்திய நிதியமைச்சர் தனது
உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டின் வளர்ச்சிக்காக 'கடுமையான
முடிவுகளை' எடுக்க வேண்டும் என்று சொல்லும் புதிய அரசின் நடவடிக்கைகளால்
அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. அதே சமயம்
தொழில் உற்பத்தி வளர்ச்சியில் தேக்கமே நீடிக்கிறது. மத்திய அரசின் இத்தகைய
முடிவுகள், நாடு முழுவதும் உள்ள தொழில் சூழலிலும், மக்கள் வாழ்வில்
கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழக தொழில்துறையையும் அது பாதிக்கும்.
இந்தச் சூழலில், மத்திய அரசின் கட்டண உயர்வு நடவடிக்கைகளை எதிர்த்த தமிழக
முதல்வர் , மக்களுக்கு சுமை கூட்டும் விதத்திலான நிதி நிலை அறிக்கைகளை
"துணிச்சலான பட் ஜட்" என்றும் "எதிர்காலத்திற்கேற்ற பட்ஜெட்" என்றும் கூறி
வரவேற்றிருப்பது சரியானதல்ல.
மத்திய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின்
பாதையிலேயே, தமிழக அரசும் தொடர்ந்து பயணிப்பது மக்களுக்குக் கடுமையான
சுமைகளை ஏற்படுத்தும்.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மத்திய பட்ஜெட்டை தமிழக
முதலமைச்சர் வரவேற்றிருப்பதை தவறு என்று உறுப்பினர்கூறுகிறார். மக்களை
பாதிக்கும் மத்திய அரசின் கொள்கைகளை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது; அதே
நேரத்தில் நல்ல அம்சங்களையும் பாராட்டுகிறது. பிரச்சனைகள் அடிப்படையில்
எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம். ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கிறோம்.
0 கருத்துகள்:
Post a Comment