திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளிவிழா தொடக்க நிகழ்ச்சி ஞாயிறன்று ஐ.கே.எப்.ஏ வளாகத்தில் நடைபெற்றது. ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திருப்பூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் முரண்பட்டு பின்னர் சமரசம் செய்து கொண்டது மட்டுமல்ல, போராடியும் இருக்கிறோம். குடும்பம், அரசியல் கட்சி என எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் அதில் முரண்பாடும் இருக்கும். கடந்த 25 ஆண்டுகளாக டீ அமைப்பு செயல்படுவது சாதாரணமானதல்ல.
அதிலும் குறிப்பாக, குறிப்பிட்ட எந்தவொரு அரசியல் கலப்படமும் இல்லாமல் கொண்டு செல்வது வரவேற்கத்தக்கது. எதிர்காலத்திலும் எந்த அரசியல் சார்பும் இல்லாமல் தொழில், ஏற்றுமதி சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டும் செயல்படும் அமைப்பாக தொடர்ந்து ஏற்றுமதியாளர் சங்கம் இருக்க வேண்டும். ஏற்றுமதியாளர் சங்கம் மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டு வரக் காரணமாக இருந்திருக்கிறது. வேறெங்கும் இல்லாமல் திருப்பூரில் தான் தண்ணீருக்கு எந்த காசும் இல்லை. ஒரு தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. (3 வது திட்ட குடிநீர்) இந்த இரட்டை தன்மை என்பது திருப்பூரில் மட்டுமே இருக்கிறது.
தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் இருந்தாலும் திருப்பூர் ஒரு பிரத்யோகமான தன்மை கொண்டது. 18ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் திருப்பூருக்கு, அதன் தனித்தன்மைக்கு ஏற்ப மாநில அரசு, மத்திய அரசு நிதி ஒதுக்கி கவனிக்க வேண்டும். ஆனால் அந்த கவனிப்பு இல்லை. ஒரு நாளைக்கு ஏராளமான குப்பை உற்பத்தியாகிறது. அதை சுத்தப்படுத்த ஏற்பாடு இல்லை. அண்டை மாநிலங்கள், வடமாநிலங்கள், பக்கத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வந்து குடியிருக்கின்றனர்.
அவர்களுக்கு வீட்டு வசதி இல்லை. உள்கட்டமைப்பு வசதி இல்லை. எனவே கோவைக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கியது போல திருப்பூருக்கு உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த சிறப்பு கவனிப்புத் தேவை. அதை நிறைவேற்ற வேண்டும்.திருப்பூரில் நஞ்சப்பா பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, கே.எஸ்.சி பள்ளி, எல்ஆர்ஜி கல்லூரி மற்றும் டவுன்ஹால் என பல விசயங்கள் திருப்பூரில் தொழில் செய்த தனிநபர்கள் பங்களிப்பில் ஏற்படுத்தப்பட்டதுதான். ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் திருப்பூரில் சாதாரண மக்களின் தேவைகள் இது போல் கவனிக்கப்படவில்லை.
டீ பப்ளிக் பள்ளி உருவாக்கப்பட்டது. அதில் சாமானிய வீட்டு குழந்தைகள் படிக்க முடியாத அளவுக்கு கல்விக்கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே சாமானிய மக்களின் பிள்ளைகள் படிக்க கூடிய முறையில் பள்ளிக்கூடங்கள் தேவை.இது போன்ற தேவைகளைச் செய்வதன் மூலம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் பன்முகத்தேவையை நிறைவேற்றக்கூடிய சங்கமாக வளர வேண்டும் என்று கே.தங்கவேல் எம்.எல்.ஏ. வாழ்த்தினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அமைச்சர் எம்.வெங்கய்யநாயுடு நிறைவாக உரையாற்றினார். அப்போது, திருப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல் திருப்பூரில் வீட்டு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். மாநில அரசு உரிய இடம் வழங்கினால் திருப்பூரில் தொழிலாளர் குடியிருப்பு வசதி ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.நிகழ்ச்சியை முடித்து புறப்பட்டபோது அமைச்சர் வெங்கய்ய நாயுடு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்ட காலம் முடிந்துவிட்டது. தற்போது இந்தியாவில் நகரமயமாக்கலை அமல்படுத்தும் வகையில் 500 நகரங்களில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளவும், வீட்டு வசதி செய்யவும், தேசிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கம், தேசிய நகர்ப்புற வீட்டு வசதி இயக்கம் என இரு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இத்திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment