கே.தங்கவேல் எம்.எல்.ஏ. சென்னையில் நேரடியாக குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திற்குச் சென்று நிர்வாக இயக்குநரிடம் கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சிக்கு இரண்டாவது குடிநீர் திட்டம்மூலம் கிடைக்கும் குடிநீர் கணிசமான மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஆனால் மேற்கண்ட திட்டத்திற்காக போடப்பட்ட பிரதான நீரேற்றக் குழாய் மற்றும் விநியோகக் குழாய்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும். இதனால் சாலை, சாக்கடை, பாலங்கள், குடிநீர் இணைப்புகள், தொலைபேசி இணைப்புகள் போன்றவைகளுக்காக குழி தோண்டும் போதும், பல்வேறு காரணங்களாலும் பிரதான குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. உடைந்த குழாய்களை சரி செய்ய முடியாமல் சாலைகள் குண்டும், குழியுமாகச் சேதமடைந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதோடு, வாகனங்களில் செல்வோர் இந்த சாலைகளில் விபத்துக்களில் சிக்குவதும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆகவே, பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இரண்டாவது குடிநீர்த் திட்டக் குழாய்களை மாற்றுவதற்கும், புதிய குடிநீர் குழாய்களைப் போடுவதற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திருப்பூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கும்படி கே.தங்கவேல் எம்.எல்.ஏ., அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment