தமிழக சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.இதன் மீது நடந்த விவாதத்தில் சிபிஎம் உறுப்பினர் கே. தங்கவேல் பேசியதாவது:
தாமிரபரணி, பவானி, காவேரி ஆறுகள் தொழிற்சாலைகள் கழிவுகளால் மாசுபடுகின்றன. காடுகளில் மாசுபடாத தாமிரபரணி ஆறு நகரங்களில் மாசுபடுகிறது. ஆறு மலையை விட்டு இறங்கியவுடன் நகரங்களில் தொழிற்சாலை கழிவுகளும், சாக்கடை கழிவுகளும் கலப்பதால் மாசுபடுகிறது. நகரங்களின் காகித ஆலை - ஜவுளி கழிவுகள் 25 லட்சம் லிட்டர் ரசாயன கழிவுகளை இரவு நேரங்களில் ஆற்றில் திறந்து விடுகிறார்கள்.
திருநெல்வேலி மாநகராட்சியில் 1,40,216 குடியிருப்புகளில் நாளொன்று க்கு 180 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படு கின்றன. இவைகளில் பெரும்பகுதி தாமிரபரணி ஆற்றங்கரையில் கொட்டப்படுகின்றன. மேலும் இறைச்சி கழிவுகளும் ஆற்றில் கொட்டப்படுகின்றன.87 இடங்களில் (கருப்பந்துரை டூ வெள்ளக்கோவில்) ஒரு நிமிடத்திற்கு 11 லட்சம் லிட்டர் கழிவு நீர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்டங்களில் 686 இடங்களில் சாக்கடை கலக்கிறது. தாமிரபரணி மாசுபடுவதற்கு திருநெல்வேலி பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடையாததால் அரைகுறையாக நிற்பதே இதற்கு காரணம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
காவிரி நதியில் கழிவு நீர் கலப்பதாக செய்திகள் வெளியாகின்றன. கர்நாடகாவில் பெங்களூர் தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறும் கழிவு நீர் சுமார் 148 கோடி லிட்டர் காவேரியில் கலந்து தமிழகத்திற்குள் வருகின்றது. காவேரியில் விடப்படும் கழிவு நீரின் காரணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவை விட 10 மடங்கு அதிமாக நீரில் மாசு நிறைந்திருப்பதாகவே மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல் வைகை ஆற்றில் கோச்சடை முதல் விரகனூர் வரை 67 இடங்களில் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. சுமார் 320 தொழிற்சாலைகளின் கழிவுகளும் கலக்கிறது.இதுபோக தமிழகத்தின் தொழிற்சாலை கழிவுகள் - சாக்கடை கழிவுகளால் மேலும் மோசமான நிலை உருவாகிறது.
கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு தமிழக அரசு தாமதமின்றி முன்வர வேண்டும்.மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உருவாகும் பவானி ஆறு பில்லூர்அணை வழியாக மேட்டுப்பாளையம் வழியே தமிழகத்தில் நுழைகிறது. இதிலிருந்து கோவை, ஈரோடுமற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 25 லட்சம் மக்கள் குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் திருப்பூர் மாநகராட்சி முதல் மற்றும் இரண்டாம் குடிநீர்த் திட்டம், சிறுமுகை, காரமடை தனி குடிநீர் திட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அமராவதி உள்ளிட்டு துணை நதிகளும் இதனால் மாசுபடுகின்றன. எனவே தாமிரபரணி, பவானி, காவேரி ஆற்றில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் திடக்கழிவுகள் கலப்பதை விரைந்து தடுத்து பாதுகாப்பான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் வெங்கடாசலம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மிகச் சிறப்பாக செயல்பட்டு கண்காணித்து வருகிறது என்றும் இதனால் ஆறுகளில் கழிவு நீர் கலக்கவில்லை என்றும் தெரிவித்தார்.



00:55
Posted in:
0 கருத்துகள்:
Post a Comment