சந்திராபுரம் பகுதியில் வடிகால் இல்லாமல் மக்கள் அவதி
கே.தங்கவேல் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு
கே.தங்கவேல் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு
திருப்பூர் 41-வது வார்டுக்கு உட்பட்ட சந்திராபுரம் கிழக்கு, ஸ்ரீ பண்ணாரி அம்மன் நகர், ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் நகர், ராஜீவ்நகர் மேற்கு இந்திரா நகர் கிழக்கு 5வது வீதி, சங்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லை. வீடுகளின் முன்பாக குழி தோண்டி வைத்து கழிவுநீரை வெளியேற்றும் நிலை உள்ளது.
சந்திராபுரத்தில் கிணறு போல் கழிவுநீர் தேங்கியிருக்கிறது. சில இடங்களில் கழிவுநீர் வீதிகளில் வழிந்து செல்கிறது.இந்த பிரச்சனைக்கு தீர்வு காண திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.தங்கவேலிடம் முறையிடுவதென இப்பகுதி மக்கள் தயாரானார்கள். எனினும் இந்த விபரத்தை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் நேரடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து பிரச்சனையை நேரில் கேட்டறிவதாகத் தெரிவித்தார். அதன்படி திங்களன்று காலை மேற்கண்ட பகுதிகளில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இப்பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக பெண்கள் உள்பட பொது மக்கள் தங்கள் குறைகளைக் கொட்டித் தீர்த்தனர்.குறிப்பாக ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கொசுத் தொல்லை, தொற்று நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.அத்துடன் தார் சாலைகள் அரிக்கப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளன. சீரான குடிநீர் விநியோகமும் இல்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை 1 மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்ட நிலை தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம்மட்டும்குடிநீர் வழங்கப்படுகிறது. ஒரு பகுதியில் 30 விநாடிகளுக்கு ஒரு குடம் நீர் நிரம்புகிறது.
மற்ற பகுதிகளில் 180 விநாடிகளுக்கு ஒரு குடம் நீர் நிரம்புகிறது. இவ்வாறு பாரபட்சமாக விநியோகம் நடைபெறுகிறது.வடிகால், சாலை, குடிநீர், மின்விளக்கு என அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயன்றாலும் அவர்கள் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர் என்று கே.தங்கவேல் எம்எல்ஏ விடம் மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக கே.தங்கவேல் எம்எல்ஏ., மண்டல உதவி ஆணையர் கண்ணனிடம் தொடர்பு கொண்டு பேசினார். மேற்கண்ட பகுதிகளில் 40 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வசதி ஏற்படுத்த திட்டம் தயாராக இருப்பதாகவும், சந்திராபுரம் பகுதியில் கூடிய விரைவில் பணிகள் தொடங்கப்படும். மற்ற பகுதிகளிலும்அடுத்த இரு மாதங்களில் பணிகள் செய்யப்படும் என்று கண்ணன் தெரிவித்தார்.இந்த விபரத்தை கே.தங்கவேல் எம்எல்ஏ அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.
மாநகராட்சி நிர்வாகம் இப்பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்திருப்பதை கூறிய எம்எல்ஏ., தேவைப்பட்டால் மாநகராட்சி ஆணையரிடமும் பேசி இப்பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். வடிகால் வசதி, குடிநீர் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற, சந்திராபுரம் பகுதி மக்களுடன்இணைந்து தேவையான முயற்சி மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment