ஓராண்டில் நான்கு முறை மட்டுமே குப்பை அகற்றம், மேட்டுப்பாளையம் குடிநீர் கிடைப்பதில்லை
மக்கள் சந்திப்பில் கே.தங்கவேல் எம்எல்ஏவிடம் அடுக்கடுக்கான புகார்
மக்கள் சந்திப்பில் கே.தங்கவேல் எம்எல்ஏவிடம் அடுக்கடுக்கான புகார்
.திருப்பூர் மாநகராட்சி 50 மற்றும் 51வது வார்டு பகுதிகளில் மக்கள் சந்திப்புப் பயணம் மேற்கொண்ட கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் பல்வேறு குறைகளைத் தெரிவித்து நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டனர். தென்னம்பாளையம் காலனி வெள்ளியங்காடு நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை மக்களைச் சந்தித்து மனுக்களை கே.தங்கவேல் எம்.எல்.ஏ., பெற்றார்
.
அப்போது கல்லூரி முதுகலை வகுப்பில் சேர்வதற்கு சான்றளிக்க, ரேசன் அட்டையில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள பெயரை சரி செய்து தர வேண்டும் என்று மாணவி ஒருவர் கேட்டுக் கொண்டார். இப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் இருந்து முறையாக கழிவுகளை அகற்றாததால் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் தாங்க முடியாத துர்நாற்றம் வருகிறது. குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழமுடியவில்லை. எனவே உடனடியாக அதை சுத்தப்படுத்தி கழிவுகள் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்குள்ள பெண் ஒருவர் கேட்டுக் கொண்டார்.அதேபோல் இப்பகுதி சாக்கடைகளில் கால தாமதம் செய்யாமல் அவ்வப்போது கழிவுநீர் அகற்றவும், குப்பைகளை அள்ளவும், மேட்டுப்பாளையம் குடிநீர் வழங்கவும் வேண்டும் என்றும் ஏராளமான பெண்கள் கேட்டுக் கொண்டனர்.
வெள்ளியங்காடு சேவ்பள்ளியில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., அந்த வட்டாரத்திற்குஉட்பட்ட வீதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தார். வெள்ளியங்காடு தெற்கு, முத்தையன் லே அவுட், ஈஸ்வரமூர்த்தி நகர், கே.எம்.நகர் பகுதிகளில் குப்பைகள் அகற்றுவது, கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்வது ஆகிய பணிகள் முறையாக நடைபெறுவதில்லை. மேட்டுப்பாளையம் குடிநீர் கிடைப்பதில்லை என்று புகார்தெரிவித்தனர். குறிப்பாக கோபால்நகர், பட்டுக்கோட்டையார் நகர், வெள்ளியங்காடு உள்ளிட்ட இந்த வட்டாரம் முழுவதுமே நல்ல தண்ணீர் விநியோகம் நடைபெறுவதில்லை என்று மக்கள் கூறினர்.
தென்னம்பாளையம் பள்ளியில் மக்களைச் சந்தித்து கே.தங்கவேல் எம்.எல்.ஏ., குறைகளை கேட்டறிந்தார். இங்கும் மேற்கண்ட அடிப்படை பிரச்சனைகளை மக்கள் தெரிவித்தனர். அத்துடன் சிலர் வீட்டுமனைப் பட்டாவழங்கக் கோரி மனு அளித்தனர்.பூம்புகார் நகர் மேற்கில் மாவட்ட ஆட்சியரக வளாகத்திற்காக இடமாற்றம் செய்யப்படுவோர் சிலருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் டோக்கன் வழங்கப்படவில்லை என்று சிலர் மனு அளித்தனர்.
அரசு வழங்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி இப்பகுதிகளில் வழங்கப்படவில்லை என்று பெண்கள் புகார் தெரிவித்தனர்.பொதுவாக மேட்டுப்பாளையம் குடிநீர், வடிகாலில் கழிவுநீர் அகற்றம், குப்பைகளை அப்புறப்படுத்துவது, தெரு விளக்கு உள்ளிட்ட மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிக அளவில் புகார் தெரிவிக்கப்பட்டது. மக்கள் தெரிவித்துள்ள பிரச்சனைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்ற கே.தங்கவேல் எம்.எல்.ஏ., இது தொடர்பாக தொடர்ந்து கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment