தென்னம்பாளையம் சந்தையில் காங்கிரீட் தளம் அமைக்க கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் கோரிக்கை
திருப்பூர் தெற்குத் தொகுதியில் ஞாயிறன்று மக்கள் சந்திப்புப் பயணம் மேற்கொண்ட கே.தங்கவேல் எம்.எல்.ஏ., முதலில் தென்னம்பாளையம் தினசரி சந்தைக்குச் சென்றார். அங்குள்ள வியாபாரிகள், சுமைப்பணித் தொழிலாளர்கள் அவரை வரவேற்று தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்து மனு கொடுத்தனர்.இந்த சந்தையின் ஒரு பகுதியில் மட்டும் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மற்ற பகுதிகளில் மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடும் நிலையில் விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்ய மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதால், அங்கு காங்கிரீட் தளம் அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதேபோல் சந்தைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் கட்டணப் பொதுக் கழிப்பிடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவது இல்லை. மூன்று கழிப்பறைகள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த சந்தையில் வேலை செய்யக்கூடிய சுமைப்பணித் தொழிலாளர்கள் கழிப்பறைக்குச் செல்ல மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. எனவே கூடுதல் கழிப்பறைகள் கட்டித் தரவும், அந்த கட்டணக் கழிப்பிடத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.சுமைப்பணித் தொழிலாளர்கள் ஓய்வெடுக்கவும், தூங்கவும் மாநகராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளஇடம் போதுமானதாக இல்லாததுடன், அதன் மேற்கூரையும் சேதமடைந்துள்ளது. எனவே தொழிலாளர்களுக்கான ஓய்வறையை விரிவுபடுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.இது தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்ட கே.தங்கவேல் எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment