திருப்பூர் நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்
பொருட்காட்சி வளாகம் அமைக்கும் திட்டத்தை கைவிடுக! கே.தங்கவேல் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி வளாகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அரசுப் பொருட்காட்சி நடத்துவதற்கு மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று திருப்பூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:திருப்பூர் மாவட்டமாக உருவான பின்னணியில் தமிழக அரசு சார்பில் பொருட்காட்சி நடத்துவதற்கு தற்போது இடம் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும், திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தை இதற்காக தேர்வு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பூரில் 80 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நஞ்சப்பா மாநகராட்சிப் பள்ளி ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விச் சேவைக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது. மாநகரமாக விரிவடைந்துள்ள திருப்பூரில் இடநெருக்கடி அதிகரித்து வரும் சூழலில் இங்குள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்களின் விளையாட்டுத் தேவைக்கு உகந்த மைதானங்கள் இல்லை. இந்நிலையில் இப்பள்ளி மைதானம் மாணவர்களின் உடல், மன ஆரோக்கியத்திற்கான அத்தியாவசிய விளையாட்டுத் தேவைக்கு பயன்பட்டு வருகிறது. எனவே இந்த மைதானத்தை இளந்தலைமுறையின் விளையாட்டுத் தேவை சார்ந்து பயன்படுத்துவதே நியாயமானதாகும்.மாறாக, அரசுப் பொருட்காட்சி வளாகமாக மாற்றுவது இந்த இடத்தின் பயன்பாட்டு நோக்கத்தைச் சிதைத்து விடும். காலப் போக்கில் வணிகரீதியான நோக்கங்களுக்கும், இதர விசயங்களுக்குமாக இப்பள்ளி மைதானத்தை மாற்றக்கூடிய நிலை ஏற்படும். மேலும் தமிழகத்தில் வேறு எங்கும் பள்ளி மைதானத்தை அரசுப் பொருட்காட்சி வளாகமாக பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அரசுப் பொருட்காட்சி வளாகம் அமைப்பதற்கு வேறு மாற்று இடத்தைப் பரிசீலித்து முடிவு செய்யலாம். நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பொருட்காட்சி வளாகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கே.தங்கவேல் எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment