மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை, பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை, சட்டத்துறை, சிறைச்சாலைகள் மற்றும் நீதி நிர்வாகத் துறைகளின் மீது விவாதம் நடைபெற்றது.இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கலந்து கொண்ட
கே. தங்கவேல் பேசியது வருமாறு:-
“நோய்நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவனின் வாக்கு.இந்த வாக்கு இன்றைக்கும் அவசியமானதாகும். மேற்சொன்ன துறைகள் அனைத்திலுமே நோய் தீர்ப்பதோடு அதன் முதல் நாடித் தீர்க்க வேண்டியது அவசியமாகும்.
சமீபத்தில் சேலம், தருமபுரி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மரணம் அதிர்ச்சிதரும் செய்தி வெளியானது. தருமபுரி சம்பவத்தை அடுத்து, இப்பிரச்சனையில் தலையிட்ட தமிழக சுகாதார திட்ட இயக்குநர், அந்த மருத்துவமனையில் கூடுதலாக 4 மருத்துவர்களும், 6 செவிலியர்களும் பணியமர்த்தியதோடு, கூடுதல் பயிற்சியளிப்பதற்காக சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து 2 மருத்துவர்களையும் அனுப்பினார்.பிரச்சனை எழுந்தவுடன் அதற்கேற்ப எதிர்வினையாற்றுவதுதான் நாம் சந்திக்கிற தலையாய பிரச்சனையாகும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:
குழந்தை இறப்பு இந்திய அளவில் நமது மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. அதாவது 1000 குழந்தைகள் பிறக்கிறது என்றால் அதில் குழந்தைகளின் மரணம் 21 தான். பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மையம் 64, சிறப்பு ஊர்திகள்(ஆம்புலன்ஸ்) வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இதுவரை 98 ஆயிரம் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது.
கே. தங்கவேல்:
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முழுமையான படுக்கை வசதி. குடிநீர் மற்றும் சுற்றுபுறச்சூழல் உட்பட வசதிகளோடு செயல்படுத்துவது மிகவும் அடிப்படையான தேவையாகும்.மேலும், மாலை நேரங்களில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆவன செய்ய வேண்டும்.மாவட்ட மருத்துவ மனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை உள்ளது. தலைக்காயப் பிரிவு, நரம்பியல் பிரிவு போன்ற மருத்துவர்கள் இல்லாத நிலையும் உள்ளது. உதாரணம் திண்டுக்கல், மேட்டுப்பாளையம், திருப்பூர், விழுப்புரம் போன்ற மருத்துவமனைகளில் இந்த குறைபாடு இருக்கிறது.
அமைச்சர்:
மருத்துவ தேர்வு வாரியம் அமைத்து கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமே 9,584 மருத்துவர்கள், 7,243 செவிலியர்கள் உள்ளிட்ட 1,61,195 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது.மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திண்டுக்கல், திருப்பூர் போன்ற பகுதிகளில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்த அரசாணை பிறப்பித்த முதலமைச்சர், 1,500 பணியிடங்களையும் நியமித்து ரூ.78 கோடி நிதியும் ஒதுக்கி கொடுத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கே. தங்கவேல்:
தமிழகத்தின் கிராமப்புற மக்களுக்கு முதலுதவி செய்யும் மையமாகவும், பிரசவ தாய் மற்றும் பிறந்த சேய் காக்கும் நிலையமாகவும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன. அவற்றின் தரத்தை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். போதுமான பணியாளர்களுடன் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்வாக இருப்பது, நோயாளிகள் நலன் காக்க அவசியமான ஒன்றாகும். தமிழக சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் 5 வருடம் முடித்த செவிலியர்கள் சுமார் 1700 பேர். 4 வருடத்தில் ஒப்பந்த அடிப்படை பணி புரியும் சுமார் 2300 பேர். இவர்கள் அரசு ஊழியருக்கான எந்த வித சலுகையும் இன்றி பணியாற்றுகின்றனர். இப்படி, தொகுப்பூதியம், காலமுறை ஊதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை ஒழித்து - தனியாருக்கு முன்னுதாரணமாக அரசு நடந்துகொள்ள வேண்டும். தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சமூகப் பாதுகாப்பான வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அமைச்சர்:
நமது மக்கள் நல்வாழ்வுத்துறை தனியாரை மிஞ்சும் அளவுக்கு நம்பர் ஒன் துறையாக விளங்கிக் கொண்டு வருகிறது. செவிலிர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். அதற்கு பிறகு, படிப்படியாக நிரந்தரப்படுத்தப்படுகிறார்கள். மூன்று, நான்கு ஆண்டுகள் கடந்த பணியாளர்களை அரசு நிரந்தரப்படுத்தி வருகிறது
கே. தங்கவேல்:
உயர் மருத்துவ சிகிச்சை வழங்கும் பணியில் தனியார் பங்கும் பெருமளவில் உள்ளது. இந்த சூழலில் உயிர் காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அவசியமாக உள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்துவரும் நிலையில் - விபத்து சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைக்கும் காப்பீட்டு சிகிச்சை வழங்க வேண்டும். குடும்ப அட்டை இல்லாததால் காப்பீடு இல்லாத குடும்பங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய, தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சைக் கட்டண ஒழுங்குமுறை மேற்கொள்ள வேண்டும். காப்பீட்டு நோயாளிகளையும் மற்ற நோயாளிகள் போல தனியார் மருத்துவமனை சிகிச்சை செய்ய உறுதிப்படுத்த வேண்டும்.
அமைச்சர்:
ஒரு கோடியே 75 லட்ச பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருத்துவ செலவை அரசு முழுமையாக வழங்கிவிடுகிறது.
கே. தங்கவேல்:
மருந்தாளுநர், பட்டயப்படிப்பு முடித்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த ஆண்கள், பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களுக்கு பணி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவ அலுவலர்கள் நியமிப்பதில் தவறுகளை தவிர்க்கும் விதமாகவும் 15, 600 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் மருத்துவத்துறை பணியாளர் தேர்வு வாரியம். ஒன்றை அரசு ஏற்படுத்தியது. அதன் பின்னரும், காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியிடப்படுவதில்லை. கலந்தாய்வுக்கே தாமதம் என பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. உரிய கால அவகாசத்தில் வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வேண்டும்.
அமைச்சர்:
மருத்துவர், செவிலியர், பணியாளர் தேர்வில் எந்த இடத்திலும் தவறு நடக்கவில்லை.
கே. தங்கவேல்:
அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் மெமோகிராம் வசதி ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான ஹோமியோ, இயற்கை மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.வேலூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் பண்டக் காப்பாளர்/ இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணிகளை பனி வரன்முறைப்படுத்த வேண்டும். ஆய்வகப் பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்.மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை போல, சந்தைப்படுத்துதல் துறைக்கு தனியாக உரிமம் வழங்கினால் அந்தத் துறையினர் வங்கிக் கடன் பெற்றிடவும், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் வழி ஏற்படும்.
அமைச்சர்:
ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் பேர்களை பணியாளர் சேவை துறை மக்கள் நல்வாழ்வுத்துறை. கடந்த நான்கு ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர்.
கே. தங்கவேல்:
அம்மா மருந்தகங்களுக்கான மருந்துப் பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்தால் சந்தை விலையை விட 36 விழுக்காடு குறைவாகக் கிடைக்கும். அதன் பலன்களை மக்களுக்கு கொடுக்கலாம். அதிகமாக மருந்தகங்களை திறக்க வேண்டும். குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில் வெறிநாய் கடி உட்பட தடுப்பூசி மருந்துகள் உற்பத்தியை தொடங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ:
மாநிலத்தில் 288 அம்மா மருந்தகங்கள் செயல்படுகின்றன. ஆன்- லைன் மூலம் ஒரே இடத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் 15 விழுக்காடு குறைந்த விலைக்கு தரப்படுகிறது. மேலும், குறைப்பதற்கு வழி வகை இருக்கிறதா என்பதை துறை ஆய்வு செய்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். கூடுதலாக அம்மா மருந்ததங்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கே. தங்கவேல்:
கல்குவாரி, மணல் குவாரி, கட்டிடத் தொழிலாளர்கள், பட்டாசு தொழிற்சாலை போன்ற அணிதிரட்டபடாத தொழிலாளர்களுக்கு, தொழில் ரீதியான நோய்களும்,விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால் இவற்றை போன்ற தொழில்சார்ந்த மருத்துவத்துறை ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு, மலேரியா போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதே நேரத்தில் அந்த நோய்க்கான பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செய்ய வேண்டும். நோய் வந்தால் போதுமான இரத்தம் தருவதற்கான ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:
தொழில்சார்ந்த மருத்துவமனை வேண்டும் என்கிறார். சிவகாசியில் தீ விபத்து அதிகம் நடப்பதால் சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
கே. தங்கவேல்:
கடுமையான ரத்த சோகை நோய் (பீட்டர் தாலசீமியா மேஜர்) என்ற நோயால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் நல்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் துறைப்பற்றி முதலமைச்சர் அவர்கள், 110 விதியின் கீழ் அறிவித்த பல திட்டங்கள் உதாரணமாக நுண்ணணு தொற்றுநோய் ஆய்வகம், திருப்பூர் மாவட்ட சிறைச்சாலை என பல திட்டங்கள் தொடங்கப்படவே இல்லை. அவற்றை விரைந்து செயல்படுத்த முனைப்புக் காட்ட வேண்டும்.
0 கருத்துகள்:
Post a Comment